
” மௌனமாக இருப்பதன் மூலம் நீ ஒரு முட்டாளோ என்ற சந்தேகம் பிறருக்கு எழலாம். ஆனால் வாய்திறந்து பேசுவதன் மூலம் நீ ஒரு முட்டாள் என்பதை நிருபிக்க வேண்டாமே” என்கிறது ஒரு பொன்மொழி.
( புதிய தலைமுறை 5/5/2016 கட்டுரை – குரங்கு மனம் வேண்டும் – ஜி . எஸ் .எஸ் – பக்கம் 25)
பேசுவதற்கு மட்டுமல்ல எழுதுவதற்கும் இக் கருத்து பொருந்தும். இதனை நிரூபிக்கிறது சேரமான் எழுதிய கைதுகளும், அவற்றின் சூட்சுமங்களும் –என்னும். கட்டுரை. கலாநிதி என்ற பட்டம் தகமை குறித்து மக்களிடையே உள்ள பிம்பத்தை நொருக்கவே இக் கட்டுரை பயன் பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது ” ஊ மையர் சபையிலே உளறுவாயன் வித்துவான்” – இது வித்துவான் க .ந . வேலன் அடிக்கடி குறிப்பிடும் பழமொழி. அவரது மாணக்கர்கள் , அவர்களோடு பழகியவர்கள் இதனை அறிவர் .
ஒருசத்திர சிகிச்சை தொடர்பாக விளக்கமளிப்பவர் அத்துறையில் நிபுணராக இருக்க வேண்டும். அல்லது M.B.B.S. படித்தவராக இருக்க வேண்டும் . குறைந்தது இவர்களோடு பழகியவர் என்ற முறையில் மிக அனுபவம் உள்ள ஒரு தாதி சொன்னால் கேட்கலாம்.
இதில் எதிலுமே சம்பந்தம் இல்லாத ஒருவர் எனக்குக் கலாநிதிப் பட்டம் உண்டு. நான் எத்துறையைப் பற்றியும் கதைக்க முடியும் என்றால் என்ன கொடுமை சரவணா இது . ?
” சிங்களப்படையினர் மீது தாக்குதல் நடத்தும் பணி தேவன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவ்வாறான தாக்குதல்களை நிகழ்த்துவதை விடுத்து வெறுமனே மின் மாற்றிகளை தகர்ப்பதிலேயே தனது அதிக நேரத்தை அவர் செலவிட்டு வந்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டைச் சுமத்தும் அடிப்படைத் தகுதி தனக்கு உண்டா என அவர் சிந்தித்திருந்தால் இவ்வாறு குறிப்பிட்டிருக்க மாட்டார். ஆயுதப் போராட்டத்தில் ஈடு பட்டிருந்தால், அதன் சிரமங்களை அனுபவ ரீதியாக உணர்ந்திருந்தால் , வேட்டுச் சத்தத்தைக் களத்திலே கேட்டிருந்தால் அவர் இவ்வாறு எழுதியிருக்க மாட்டார். எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பது அந்தந்தக் காலத்தில் எமது பலத்தையும், எதிரியின் வலிமையையும் பொறுத்து அமைவது.
மது எதிர்ப்புக்காக ஈச்சை, தென்னை மரங்களைத் தறியுங்கள் என்று காந்திஜி சொன்னதை ஏற்று தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை தந்தை பெரியார் வெட்டினார். அந்தக் காலத்தில் அது சரியாக த்தென்பட்டது.
எமது மண்ணில் பிரபாகரன் தொண்டமானாற்றில் பேருந்து எரித்து அரச எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் என்று வரலாறு குறிப்பிடுகிறது.கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த – காவல் துறை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிராத சூழலில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம்.
இவை போன்றதே கிழக்கை முழுமையாக இழந்த நிலையில் தேவன் மேற்கொண்ட நடவடிக்கைகள். இவையெல்லாம் கலாநிதிகளின் தீர்ப்பின் படி சின்னப்பிள்ளைத்தனமானது. இன்று யார் யாரைத் துரோகி என்று கூறுவது என்ற விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது. களமுனைக்கோ ,போராட்டத்துக்கோ சம்பந்தமில்லாதவர்கள் மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுகின்றனர்.
1981இல் குட்டிமணி , தங்கத்துரை , ஜெகன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து சித்திரவதைகளின் கொடூரத்தால் விமலதாசன், சிவச்செல்வம், தாமு கந்தையா, சதீஸ்வரன் ஆகியோர் கைதாகும் சூழல் ஏற்பட்டது.
தேவர் அண்ணா, கே .பி , நேசன் (,ரவீந்திரராஜா ) வறுவா, சின்ன வறுவா, கிட்டு, பொன்னம்மான் முதலானோர் தலை மறைவாகும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோரின் பெயர்கள் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சேரமானின் தீர்ப்பின் படி மேற் குறிப்பிட்ட மூவரின் பேர்களும் மாவீரர் பட்டியலில் இருந்து . நீக்கப்படவேண்டும் .
ஒருவர் உயிருடன் கைதானால் அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகளை அவர் எவ்வளவுதான் முயற்சித்தாலும் தடுக்க முடியாது.இதையெல்லாம் அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். யாரோ போராட போராட்டத்தின் பெயரால் புகலிடம் பெற்று போதனாசிரியர்களாக மாறியவர்களுக்குப் புரியாது.
இன்று நிலாந்தன் போன்ற பிரபல ஆய்வாளர்களும் தமிழர்களுக்கு மே 18யில் நிகழ்ந்த பாரிய இழப்பு பற்றி குறிப்பிடத் தொடங்கிவிட்டனர். முதலில் நாம் எமது மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் இந்தப் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கு புகலிடம், உணவு, உடை, நிதி, மருந்து, புதல்வர்கள் என அனைத்தையும் வழங்கியவர்கள் எமது மக்கள்.
சேரமான் போல் அல்லாது முள்ளி வாய்க் கால் வரை எம்முடன் கூடவே வந்தவர்கள். அவர்களுக்கு எவ்வளவு காலத்துக்குத்தான் பொய் உரைக்க முடியும்? இப்போது நிறுவ முயலும் பொய்யை இன்னும் 38 வருடங்களுக்குத்தான் சொல்லலாம். அதற்குப் பிறகு இவரது வாரிசுதான் இந்தப் பொய்யை அடுத்த சந்ததிக்குக் கடத்த வேண்டும். ஏனெனில் ஒரு மனிதருக்கு 100 வயது வரைதான் வாழ்வு.
, களத்தில் நின்றவர்களைத் துரோகி என்று விரல் நீட்டும் தகுதியை தமிழ் மக்கள் , குறிப்பாக மாவீரர்களின் பெற்றோர்கள் சேரமான் போன்றோருக்கு வழங்கவில்லை.
களமுனை யதார்த்தம் தெரியாமல் திருமலையிலும் , மட்டக்களப்பிலும் , கஞ்சிக்குடியாறு காடுகளிலும் இருந்தவர்கள் சிறிலங்காப் படையினருடன் மோதவில்லை என விரலை நீட்டுகிறாரே சேரமான் .
இவர் எத்தனை களம் கண்டவர் ? வீரச் சாவு அடைவது என்பது வேறு, காயமடைவது என்பது வேறு. களமுனைகளில் ஒருவர் காயமடைந்தால் அவருக்கு மேலதிக சிகிச்சை அளிக்க என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவருக்குப் புரியுமா’?
எல்லோரும் துரோகிகள் என்றால் அரச கட்டுப்பாடு இடங்களைச் சேர்ந்த மறைமுகச் செய்தியாளர்கள் அவர்களோடு தொடர்பு வைத்திருந்த சேரமான் போன்றோர் தியாகிகளா ? ஒரு பொறிவெடி வைப்பது கூட எவ்வளவு ஆபத்தான, உயிரைப் பணயம் வைக்கும் முயற்சி என்பது இந்தப் கலாநிதிக்குப் புரியுமா?
எல்லாக் கட்டளைகளையும் தலைவர் பிறப்பித்த போது இவர் அருகிலா இருந்தார்? அல்லது இவரைக் கேட்டுத்தான் அவர் செய்தாரா? திருமலை , மட்டக்களப்பு மாவட்டங்களை விட்டு போராளிகள் வெளியேறிய பின் திருப்பி அனுப்பும் போது 2008 மாவீரர் நாளுக்கு முன்னர் அதிர்ச்சியில் உறைய வைக்கக் கூடிய தாக்குதலை மேற் கொள்ளுங்கள் எனத் தலைவர் கட்டளை பிறப்பித்தார் என்கிறார்.
அப்படியானால் சண்டைக்கான முன் ஏற்பாடு, சாப்பாடு, முதலுதவி , இரத்தம் வழங்கல், மேலதிகச் சிகிச்சை போன்ற விடயங்களை அவர் கவனத்தில் எடுக்க வில்லை என்று தலைவர் மீதுமறைமுகமாகக் குற்றம் சாட்டுகிறாரா?
கிழக்கிலிருந்து வெளியேறி வரும்போது எத்தனைநாள் பட்டினி கிடந்தார்கள், எவ்வளவு பேரை இழந்தார்கள் போன்ற விடயங்களைத் தெரிந்திருந்தால், கண்டிருந்தால் இவர் இப்படி எழுத மாட்டார்.
முதலில் இவர்களைப் போன்றோர் யதார்த்த உலகுக்கு வரட்டும் .நாட்டில் வாழ்க்கை நடத்தச் சிரமப்படும் மாற்றுத்திறனாளிகளான முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை வளப்படுத்த என்ன செய்ய வேண்டுமெனச் சிந்திக்கட்டும். அவர்கள் மீனை எதிர்பார்க்கவில்லை மீன் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள். அதற்கான ஆதாரங்களை வழங்குங்கள்.
கௌரவமாக வாழ உதவுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களின் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து வாண விளையாட்டுக் காட்ட வேண்டாம். யாருடைய உயிருடன் விளையாடுகிறீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் என்றே அனைவரும் எதிர் பார்கின்றனர்.
எங்கள் பிள்ளைகள் உயிரையும் , உதிரத்தையும் கொடுத்துப் போராடி இருக்கிறார்கள். இவர்களின் தகுதியை எழுதுவதற்கு கூலி வாங்குபவர்கள் தீர்மானிக்க முடியாது .
இவர்களுக்கு இன்னொன்றையும் நினைவூட்ட வேண்டும். அது எழுத்துலகம் பற்றியது . ஜெயராஜ் – 1987இல் இருந்து பத்திரிகையாளராக விளங்கியவர் . தனது தனிப்பட்ட வாழ்க்கையை நினைத்திருந்தால் இவர் கல்விப் பணிப்பாளராகக் கூட வந்திருக்கலாம். ஆனால்கல்வி உலகத்துக்குள் போக வில்லை இந்தப் பட்டதாரி .
19.02.1990 யில் ஈழநாதம் தொடங்கிய நாள் முதல் 2009 ஏப்ரல் ஈழ நாதத்தின் இறுதி நாள் வரை களத்திலேயே நின்று விட்டு 16.05.2009 தான் முள்ளி வாய்க் காலை விட்டு வெளியேறினார் . தனது இளமைக் காலத்தை போராட்டக் காரர்களுடன் சேர்ந்தே தொலைத்தனர் .
இலங்கையில் தொடர்ச்சியாக இரு தசாப்த காலம் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியது என்றால் சின்ன விடயமா? அவர் இன்று புலம்பெயர் நாட்டில் சிறு வேலை செய்து சிரமப் படுகிறார்.
ஆனால் களத்திற்குச் சம்பந்தமில்லாத இவரைப்போன்ற ` புத்தி` ஜீவிகள் தமக்கு கூலி கொடுப்பவர்களின் நோக்கத்தையே நிறைவேற்றுகிறார்கள்.
இவர்கள் ஓடும்வரை ஓடட்டும். பாட்டெழுதிப் பரிசு வாங்கும் புலவர்களை விட குற்றம் கண்டுபிடித்தே பரிசு வாங்கும் புலவர்களின் காலமல்லவா இது.
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
0 comments :
Post a Comment